உள்ளூர் செய்திகள்

மானாமதுரை முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

மானாமதுரை முருகன் கோவில்களில் தைப்பூச விழா

Published On 2023-02-06 08:16 GMT   |   Update On 2023-02-06 08:45 GMT

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை ெரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் நடந்த தைப்பூச விழாவில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்தனர்.

    மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு கிராமத்தில் எழுந்தரு ளியுள்ள செல்வமுருகன் கோவி லில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வ முருகனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் செய்திருந்தார்.

    மானாமதுரையில் தாய மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மயூரநாதர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலிலும் தைப்பூச விழா நடந்தது.

    இடைக்காடர் சித்தர்கோவிலில் பவுர்ணமி அன்னதான வழிபாட்டு குழுசார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவு இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் .

    கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, கருப்பனேந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல்ஜீவ ஒடுக்கம் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.

    இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி, காசி விசுவநாதர் கோவிலில் செந்திலாண்டவர் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. செந்திலாண்டவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற்று தீபார தனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செந்திலாண்டவரை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி எஸ். பி.தேவர் செய்திருந்தார்.

    வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோவிலில் தங்ககவசம், பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்த தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

    Tags:    

    Similar News