சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா
- சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா நடைபெற்றது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165-வது அவதார விழா கருப்பனேந்தல் மடத்தில் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.
பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும், அபிஷேகப் பொருட்களாலும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அவதார விழாவில் பங்கேற்று மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனர். கருப்பனேந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.