உள்ளூர் செய்திகள்

குதிரை வாகனத்தில் வந்த திருப்பரங்குன்றம் நவநீத பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

நவநீத பெருமாள் வீதிஉலா

Published On 2022-08-24 13:44 IST   |   Update On 2022-08-24 13:44:00 IST
  • நவநீத பெருமாள் வீதிஉலா நடந்தது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதிக்கு திருப்பரங்குன்றம் திருகூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதபெருமாள் அங்கிருந்து ஆடி பவுர்ணமி அன்று புறப்பட்டு சுமார் 25 நாட்கள் பல ஊர்களில் வீதிஉலா சென்று மானாமதுரையை வந்தடைந்தார்.

இதில் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வைகைகரை அய்யனார், அலங்காரகுளம் சோனையா கோவிலுக்கு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு நவநீதபெருமாள் எழுந்தருளி வந்தார். சுவாமியை பரம்பரை அறங்காவலர் காளீஸ்வரன் பூரண கும்பமரியாதையடன் வரவேற்றார்.

பின் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், நவநீதபெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து பக்தர்களிடம் விடைபெற்ற நவநீதபெருமாள் மானா மதுரை சங்குபிள்ளையார் கோவிலில் தங்க வைக்கப்பட்டார். மறுநாள் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரக்கடையில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்லக்கை சுமந்து வந்த பக்தர்களுக்கு தொழில் அதிபர்கள் ஆனந்த கிருஷ்ணன், குணா ஆகியோர் மதிய உணவு வழங்கினர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு நவநீதபெருமாள் வீதிஉலாவரும் நிகழ்ச்சியில் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சுவாமி பல்லக்கு கீழமேல்குடி, கால் பிரவு வழியாக கட்டிக்குளம் சென்றது. அங்கு ராமலிங்க சுவாமி கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையான கருப்பனேந்தல் மடத்தில் நவநீதபெருமாளுக்கு வழிஅனுப்பும் விழா நடக்கிறது.

அதைதொடர்ந்து நவநீதபெருமாள் பல ஊர்களில் வலம் வந்து வருகிற 4-ந்தேதி திருகூடல்மலைக்குவரும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

Similar News