உள்ளூர் செய்திகள்

இரட்டைக்கொலை வழக்கில் துப்புதுலக்காததை கண்டித்து உண்ணாவிரதம்-கடையடைப்பு

Published On 2023-02-06 13:49 IST   |   Update On 2023-02-06 13:49:00 IST
  • இரட்டைக்கொலை வழக்கில் துப்புதுலக்காததை கண்டித்து தேவகோட்டையில் நாளை உண்ணாவிரதம்-கடையடைப்பு நடைபெறும்.
  • இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி, பேரன் மூவரசு ஆகிய 3 பேரை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு கனகம் தனது பேத்தி திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வேலுமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். கனகம் மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி இறந்தார். மேலும் மூவரசு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கண்ணங்கோட்டை கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கிராம மக்கள் நகை கொள்ளைபோனதால் கனகம் பேத்தியின் திருமணம் நின்று விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 25 நாட்களாக போலீசார் துப்பு துலக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி நாளை (7-ந்தேதி) அடையாள உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News