உள்ளூர் செய்திகள்

புதிய ரேசன்கடையை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு மற்றும் பலர் உள்ளனர்.

ரூ.37.88 லட்சம் கடன் உதவி

Published On 2022-08-28 08:32 GMT   |   Update On 2022-08-28 08:32 GMT
  • கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
  • அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று ரேசன்கடையை திறந்து வைத்தார். மேலும் 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

குடும்ப அட்டை தாரர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரித்து தனியாக புதிய நிலைவிலைக்கடைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில், தற்போது செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் 454 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகப் பொருட்கள் மாதந்தோறும் உரிய அளவின்படி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கிருங்காக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அணை க்கரைப்பட்டி பகுதி நேர நியாயவிலைக்கடையில் பாரதி நகர் கிராமத்தில் 168 குடும்ப அட்டைகள் உள்ளன.

பாரதி நகர் கிராமம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களை பெறும் வகையிலும், மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடத்தில் இயங்குவதற்கு பகுதிநேர நியாயவிலைக்கடையாக அமைக்கப்பட்டு, இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், சரகத்துணைப் பதிவாளர் (காரைக்குடி) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டாட்சியர் கயல்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News