மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
- தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.
இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.
அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.