காரமடையில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
- மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
காரமடை :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்கள் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது.
அதே சமயத்தில் மார்க்கெட்டை தற்போது பஸ் நிலையமாக செயல்பட்டு வரும் இடத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது.நகராட்சியில் இந்த முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நகராட்சி தனது முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் திரும்ப பெறவில்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று காலை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டுள்ளது.