உள்ளூர் செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு.

மழை பாதித்த பகுதிகளில் ஷாநவாஸ் எம்.ஏல்.ஏ. ஆய்வு

Published On 2023-11-16 09:52 GMT   |   Update On 2023-11-16 09:52 GMT
  • தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
  • காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை ஒன்றியம் பாலையூர் பகுதியில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ நேரடி ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி, விற்குடி, வடகரை, கீழப்பூதனூர் ஆகிய பகுதிகளிலும் வயல்களில் இறங்கி பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

மழை பாதிப்புகள் குறித்து ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது, ஏற்கெனவே, காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் அதிக பாதிப்பை சந்திக்கும் நாகையின் மீது அரசு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News