புதுவை-காரைக்காலில் பள்ளிகள் திறப்பு- மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்
- பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
- இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியானது.
இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.
முன்னதாக பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன.
இன்று காலை அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
அதே வேளையில் இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.