சம்பள பணத்தை கேட்டு ஓசூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
- துப்புரவு பணியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை.
- போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை பார்த்து வந்தனர்.
அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 23 நாட்கள் சம்பள பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் துப்புரவு பணியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும் சம்பள பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிகளில் ஈடுபடாமல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.