உள்ளூர் செய்திகள்

ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில்7-ஆம் ஆண்டு சம்பத் சராபிஷேகம்

Published On 2023-07-11 13:26 IST   |   Update On 2023-07-11 13:26:00 IST
  • சோமேஸ்வரர் கோவிலில் 7-ஆம் ஆண்டு சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா 2 நாட்கள் நடைபெற்றது.
  • லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் உள்ளிட்டவைகள் நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகரில் உள்ள சொர்ணம்பிகை சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் கோவிலில் 7-ஆம் ஆண்டு சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா 2 நாட்கள் நடைபெற்றது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக தினத்தை சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி விழாவானது, நேற்று முன்தினம் ,கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, புண்ணியாவசனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் உள்ளிட்டவைகள் நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று ருத்ரயாகத்துடன் தொடங்கி மூலவர்களுக்கும் கலச அபிஷேகம் நடத்தி, தீபாராதனை செய்யப்பட்டது.

பின்னர் காலை முதல் மாலை வரை ஏகதின லட்சாச்சனை நடைபெற்றது. இதில் மூலவர் சிவபெருமானுக்கு வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வில்வ இலைகளாலும் மலர்களாலும் லட்ச அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

பின்னர் மூலவருக்கு மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News