வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்கள்.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு
- விழாவிற்கு சேலம் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்
- பக்தர்கள் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25
சேலம்:
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அடுத்த மாதம் 13-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்று மூலவர் அழகிரிநாதர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய சாமிகளுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்து சிறப்பு பூஜைகள் நடத் தப்படுகிறது.நாளை வரை பகல் பத்து உற்சவமும், 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடை பெறுகிறது.விழாவிற்கு சேலம் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் நெரிச–லைக் கட்டுப்படுத்தி, அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு நாளன்று, காலை 7மணி முதல் இரவு 9மணி வரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25-யை இணையதளம் மூலம் செலுத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. இதனால் பலர் ஆன்லைனில் முன் பதிவு செய்து வருகிறார்கள் முன் பதிவு செய்ய கோட்டை பெருமாள் கோவிலிலும் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பக்தர்கள், குண்டு போடும் தெரு (வெங்கடசாமி தெரு) வழியாக கோவிலுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சொர்க்கவாசல் திறப்பு நாளன்று ஒருநாள் மட்டும் பொதுதரிசனம் மற்றும் இலவச தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பழைய புத்தக கடை வீதி, ஹபீப் தெரு, வழியாக கோவிலுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, முக்கிய பிரமுகர்களுக்கான பேட்ஜ் மற்றும் பாஸ் வழங்கப்படாது எனவும், சொர்க்கவாசல் 2-ந் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 12-ந் தேதி வரை திறந்திருக்கும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கபப்ட்டு உள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.