மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும்
- தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ.653 சம்பளம்
- ஆனால் தனியார் நிறுவனம் வெறும் ரூ.350 மட்டுமே வழங்கி வருகிறது
சேலம்
தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ.653 சம்பளம் வழங்கிட அறிவித்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இந்த தொகை முறையாக வழங்கி வரும் நிலையில் சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்க வேண்டிய 653 ரூபாயை வழங்காமல் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் வெறும் ரூ.350 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த ஏராளமான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதனையடுத்து இன்று நடந்த மாமன்ற கூட்டத்தில் ஒரு சில கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக மேயர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில் கவுன்சிலர் இமயவர்மன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேயரை சந்தித்து தனியார் ஒப்பந்ததாரர் வழங்கும் குறைவான ஊதியத்தை குறித்து புகார் தெரிவித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மேயர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதனிடையே தூய்மை பணியாளருக்கான முழு ஊதிய தொகையும் வழங்காவிட்டால் அடுத்த மாதம் நடைபெறும் மாமன்ற கூட்டத்தின் போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.