உள்ளூர் செய்திகள்

கொலைசெய்யப்பட்ட சக்தி  /  கைதான மணிமுடி

என்னையும், மகளையும் தீ வைத்து எரிக்க முயன்றதால் கடப்பாரையால் அடித்துக் கொன்றேன்

Published On 2023-11-04 07:00 GMT   |   Update On 2023-11-04 07:00 GMT
  • சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
  • சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

மதுபழக்கம்

இவருக்கு மணிமுடி (35) என்ற மனைவியும், 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் சக்தி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

அடித்து கொலை

அப்போது அவர் மனைவி மணிமுடியை தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த மகளையும் சக்தி தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமுடி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து கணவர் தலையில் பலமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சக்தி சரிந்து விழுந்து இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தியின் மனைவி மணிமுடியை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

வாக்குமூலம்

எனது கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் என்னை, மகளையும் தாக்க முயன்றதுடன் வீட்டில் கேனில் வைத்திருந்த மண்எண்ணையை எங்கள் மீது ஊற்றி தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடப்பாரை எடுத்து கணவரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மணிமுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News