உள்ளூர் செய்திகள்

போலீஸ் வாகனத்தை திருடிய மதன்

சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனத்தை திருடிய வாலிபர் கைது

Published On 2023-02-09 15:20 IST   |   Update On 2023-02-09 15:20:00 IST
  • சேலம் வின்சென்ட் குமாரசாமிபட்டியில் தற்போது 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது.
  • காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆயுதப்படை மைதானத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் அமர்ந்து கொண்டு, ஜீப்பின் பாகங்களை கழட்டிக் கொண்டிருந்தார்.

சேலம்:

சேலம் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் சேலம் வின்சென்ட் குமாரசாமிபட்டியில் உள்ளது. இங்கு தற்போது 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆயுதப்படை மைதானத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் அமர்ந்து கொண்டு, ஜீப்பின் பாகங்களை கழட்டிக் கொண்டி–ருந்தார்.

இதைக் கண்ட போலீஸ்காரர் ஒருவர், அந்த நபரிடம் விசாரித்த–போது, அந்த வாலிபர் தான் அரசு அதிகாரி என்றும், வாகனத்தை சோதனையிட வந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார்.

ஆனால் அவர் அந்த வாகனத்தை திருடி செல்வதற்காக சாவி போடும் பகுதியை கழற்ற முயற்சித்து உள்ளதையும், அவர் போலி அதிகாரி என்பதையும் போலீஸ்காரர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், வேறு ஏதும் வாகனங்கள் திருடப்பட்டு உள்ளனவா என மைதானத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை சரிபார்த்த போது, ஜீப் ஒன்று ஏற்கனவே காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் மதன் (வயது 36) என்பதும், அவர் அந்த மாயமான ஜீப்பை திருடி, சூரமங்கலம் ரெயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருப்பதும் தெரியவந்தது.

போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஜீப்பை மீட்டு அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து 2-வது முறையாக ஜீப்பை திருட முயன்றபோது பிடிபட்டுள்ளார். இவர் அரசு துறை துணை இயக்குநர் எனக்கூறி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசார் வாகனங்களை குறி வைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து மதனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News