உள்ளூர் செய்திகள்

முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வீட்டை வழங்கினார்.


நாங்குநேரி முதிய தம்பதிக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

Published On 2022-06-19 14:18 IST   |   Update On 2022-06-19 14:18:00 IST
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் தம்பதியின் குடிசை வீடு இடிந்து விழுந்தது.
  • இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநேரி வி.கே. நகரைச சேர்ந்தவர்கள் வேலு -இசக்கியம்மாள் தம்பதியர். முதியவர்களான இவர்கள், மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் இவர்களது குடிசை வீடு இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினரை நேரில் சந்தித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இடிந்து விழுந்த வீட்டை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக உறுதியளித்தார்.

அதன்பேரில் தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார்.

தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இன்று அங்கு நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். கன மழையில் வீட்டை இழந்த முதிய தம்பதியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. செய்துள்ள இந்த மனிதாபிமான உதவியை நாங்குநேரி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

Tags:    

Similar News