உள்ளூர் செய்திகள்

கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் ரூ.67 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

Published On 2022-11-11 15:54 IST   |   Update On 2022-11-11 15:54:00 IST
  • கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திருப்போரூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு மீன் உலர வைப்பதற்கும், பெரிய வலை இழுப்பதற்கும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், தமிழக அரசு கடலோரத்தில் 5.48 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை ஒரு சில நபர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து அதற்கு பார்க்கிங் வசதி செய்தும் புல் செடி மரம் வளர்த்து அதனை சுற்றி 10 அடி உயரத்தில் கருங்கல்லால் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அதனை தொடர்ந்து கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கானத்தூர் போலீசார் உதவியுடன் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பிய இடங்களை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தனர் இதன் சந்தை மதிப்பு ரூ.67 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 292 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News