பெரும்பாறை அருகே தொடர் மழையால் சாலையில் உருண்டு கிடக்கும் பாறைகள்
- பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது.
- தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, குபப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது. அதோடு காற்றும் சுழன்று அடித்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடக்கின்றன. இதனால் பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.