உள்ளூர் செய்திகள்

திருடிய நகைகளை திருப்பி வைக்காததால் கோவில் சூலாயுதத்தில் சேவலை குத்தி பரிகாரம்

Published On 2023-09-24 11:13 GMT   |   Update On 2023-09-24 11:13 GMT
  • புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
  • சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வழக்கம்போல் மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

பின்னர் 16-ந் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் சாவி அருகில் உள்ள வீட்டின் பகுதியில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், நகை கிடைக்காத நிலையில் வெள்ளாங்கோயில் பகுதியில் நகை மற்றும் பணத்தை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அதனை அங்கேயே வைத்து விடும்படியும், இல்லையென்றால் (இன்று) வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யப் போவதாகவும் இந்த பரிகாரம் செய்யும்போது பணம், நகை எடுத்தவர்கள் குடும்பமே கடும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும்,

இதனை தவிர்க்க வீட்டில் இருந்த பணம், நகை எடுத்தவர்கள் கொண்டு வந்து அங்கேயே வைக்குமாறு பாதிக்கபட்ட குடும்பத்தினர் பிளக்ஸ் பேனர் அடித்து வீட்டின் முன்புள்ள சாலையில் வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்பகுதி மக்கள் இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இந்நிலையில் திருடிய நகை வைக்கப்படாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேனரில் கூறியவாறு மாங்காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த சூலாயுதத்தில் இன்று சேவலை குத்தி பரிகாரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News