அலகுமலையில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு
- நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.
- நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அலகுமலை ஊராட்சியில், அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். அவர் அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று அந்த இடத்திற்குச் சென்ற வருவாய்த் துறையினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆதிதிராவிடர்களுக்கு நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட நிலத்தை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த விற்பனை செல்லாது. எனவே அந்த நில பட்டாவை ரத்து செய்து அரசு நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.