உள்ளூர் செய்திகள்

மினி லாரியில் 2¾ டன் ரேஷன் அரிசி கடத்தல்- டிரைவர் கைது

Published On 2023-04-15 15:40 IST   |   Update On 2023-04-15 15:40:00 IST
  • மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
  • போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

நந்திவரம்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் நந்திவரம் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி டெம்போ லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அந்த மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 38) என்பதும், இவர் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி.சாலை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ லாரியும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News