உள்ளூர் செய்திகள்
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த செங்காடு மோட்டூர் கிராம பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் முயற்சித்துள்ளது.
ஏற்கெனவே கிராம பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, ஏரியில் மண் அள்ளுவதற்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஏரியில் மண் அள்ள கூடாது என வாலாஜாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா. வெங்கட் மற்றும் அதிகாரிகளிடம் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை வழங்கினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.