பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
அம்மன் கோவிலில் பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன்
- சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்
- பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் அம்மனுக்கு மாலை அணிவித்தனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடிமாதத்தை முன்னிட்டு எட்டியம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.முன்னதாக காலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தும்,பழங்களை படையலிட்டும் கால்நடைகள் நோய் நோடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் எட்டியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எட்டியம்மன், ரேணுகாம்பாள் ஆகிய சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
அப்போது பூங்கரகம், தீ சட்டி, அலகு குத்தி கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
எட்டியம்மனுக்கு மாலை போட்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் மாலை அணிவித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
திருவிழாவில் மாம்பாக்கத்தை சுற்றியுள்ள ஆரூர், பொன்னமங்கலம், சஞ்சீவிபுரம், சொரையூர், மேல்பதுப்பாக்கம், பென்னகர், அக்கூர், குப்படிசாத்தம் என பல்வேறு கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.