பயனாளிகளை அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது
- பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வேண்டுகோள்
- கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடன் உதவிகளை வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில்:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
அதனை பெற பயனாளிகள் வரும் போது அவர்களை துறை சார்ந்த அலுவலர்கள் அலைக்கழிக்க கூடாது. நடப்பு நிதி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாப்செட்கோ மூலம் ரூ.ஒரு கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்து பேசினார் .
பின்னர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிக கடன்கள் பெற்று தொழில் செய்து வரும் சோளிங்கர் தாலுகா, கன்னிகாபுரம் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.