வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டுரங்கில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை வாங்கினர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
மேலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவும் அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்து துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.