உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் ராமநாதபுரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசாமி தலைமையில் நடந்தது.

தேவையில்லாத இடங்களில் வேகத்தடை; அரசு பணம் வீணடிப்பு

Published On 2022-11-27 14:05 IST   |   Update On 2022-11-27 14:05:00 IST
  • தேவையில்லாத இடங்களில் வேகத்தடை; அரசு பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சி துறை, மின்சாரத் துறை, வட்டார போக்குவரத்து துறை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை பதிவாளர், முதன்மை கல்வி துறை மற்றும் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த 22 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இபுராகீம் கலந்து கொண்டு பேசினார்.

கீழக்கரை 21 வார்டு பகுதியில் மொத்தம் 105 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன் முதியோர், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

விபத்தும் ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. ஆகவே கீழக்கரை நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்து தேவையில்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.

கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர். ரோடு சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கண்ணாடி அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து தோணி பாலம் வரை, பூங்காவில் இருந்து அமிர்தா பள்ளிக்கூடம் வரை சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை புதிய பஸ் நிலையத்திற்கு திருநெல்வேலி, சாயல்குடி, நாகூர், பட்டுக்கோட்டை பஸ்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைகின்றனர். இதை கண்காணிக்க போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரை நியமிக்கவும், தாலுகா அலுவலகத்தில் புறநகர் பஸ்களை நிறுத்தி செல்லவும், அங்கு வேகத்தடை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

நுகர்வோர் நலச்சங்க கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நல சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News