உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2022-11-21 07:05 GMT   |   Update On 2022-11-21 07:05 GMT
  • ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.
  • இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சொர்ண கணபதி (வயது 36). இவர் ராமநாதபுரம் சபாநடேச ஐயர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மாமியார் மற்றும் மனைவி குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று வீடு திரும்பிய சொர்ண கணபதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 9 பவுன் மற்றும் வெள்ளியிலான சாமி பொருட்கள், சாமி விளக்குகள், 2 பஞ்சாத்திர ருத்திரயாணி, ஒரு சந்தனபேழை, ஒரு குங்கும சிமில் ஆகியவை திருடு போயிருந்தது.

இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News