உள்ளூர் செய்திகள்

பணம் கையாடல்: கரூவூல கணக்கருக்கு உடந்தையாக இருந்த 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2023-02-23 09:50 GMT   |   Update On 2023-02-23 09:50 GMT
  • ரூ.1.88 கோடி கையாடல் செய்த கரூவூல கணக்கருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • தனது மகளின் மருத்துவ செலவுக்காக கையாடல் செய்தது தெரியவந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(வயது 45). இவர் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக வேலைபார்த்தபோது கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் வரை மோசடி செய்தது தணிக்கையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் முனியசாமி கடந்த 9-ந்தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ராமநாதபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் முனியசாமி மகள் மகாமதிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்ததும், மகளின் மருத்துவ செலவுக்காக ரூ.1.88 கோடி அரசு கரூவூல பணத்தில் இருந்து கையாடல் செய்தது தெரியவந்தது.

அதற்கு அவரது மனைவியும், முன்னாள் படைவீரர் நல அலுவலக ஊழியரான கண்ணகி, முனியசாமியின் தங்கை கணவர் கண்ணன், நண்பர் எஸ்.வி.மங்கலம் ஜீவா ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கையாடல் செய்த பணத்தை வைத்து மகளின் மருத்துவ சிகிச்சையை முடித்த முனியசாமி, மீதம் உள்ள பணத்தில் சொத்துக்கள் வாங்கியதோடு வீடும் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முனியசாமியின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த உறவினர் பாலமுருகன், வென்னீர் வாய்க்கால் ஆனந்தவள்ளி, முனியசாமியின் அண்ணன் சித்ரவேலு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News