- ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (31-ந் தேதி) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீ லிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.