சாயல்குடியில் டயர் வெடித்து பழுதடைந்து நின்ற அரசு பஸ்
- சாயல்குடியில் டயர் வெடித்ததால் அரசு பஸ் பழுதாகி நின்றது.
- டிரைவர் சாதுரியமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பணிமனையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ் சாயல்குடியில் அரசு பள்ளி அருகே வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் பஸ் நிலை தடுமாறியது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அபாய குரல் எழுப்பினர்.
உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறங்கி சென்றனர். டிரைவர் சாதுரியமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பஸ் டயர் மாற்றப்பட்டு புறப்பட்டு சென்றது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், நீண்ட தூர சுற்றுலா வழிபாட்டு தலங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்களை முறையான பராமரிப்பின்றி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இயக்குவது தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாகவே அவ்வப்போது அரசு பஸ்கள் பழுதாகி சாலையின் நடுவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.