ஆலங்குடி அருகே 6.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது
- வடகாடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இதைத்தொடர்ந்து, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடகாடு, காகித ஆலைச்சாலை, புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள 3 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்றது தெரியவந்துள்ளது
இதைத்தொடர்ந்து, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடகாடு செட்டியார்தெருவைச் சேர்ந்த சக்திவேல் (வயது 29) வடகாடு பரமநகரைச் சேர்ந்த வீராச்சாமி (70), கரம்பக்காடு பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (33) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீஸார் பிடித்து வந்து வடகாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.