உள்ளூர் செய்திகள்

கன்னிகைப்பேர் கிராமத்தில் சீரான மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2023-04-21 17:51 IST   |   Update On 2023-04-21 17:51:00 IST
  • குறைந்த அழுத்த மின்சார சப்ளை நடைபெறுவதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  • சுமார் ரூ.3 லட்சம் செலவில் விநாயகர் கோவில் தெரு முனையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கும் பணி கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள பெரிய காலணியில் விநாயகர் கோவில் தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சார சப்ளை நடைபெறுவதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், துணைத் தலைவர் மேனகா பிரேம் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் முறையிட்டனர். இந்நிலையில், சுமார் ரூ.3 லட்சம் செலவில் விநாயகர் கோவில் தெரு முனையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கும் பணி கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மதியம் மேற்கண்ட இரண்டு தெருகளில் உள்ள மின் இணைப்புகளை டிரான்ஸ்பார்மரில் இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது மூன்று நபர்கள் வந்து டிரான்ஸ்பார்மர் இங்கு அமைக்க கூடாது. மின்வாரிய ஊழியர்கள் யாரும்? பணி செய்யக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் அப்பணி பாதியில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கண்ட இரண்டு தெருகளில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மேற்கண்ட மூன்று நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பிரச்சனை ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர்கள் பயந்து போய் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மர் பணியை முடித்து சீரான மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தங்களது கோரிக்கையை முன்வைத்து கன்னிகைப்பேர் சர்ச்சை எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்து நின்றது.தகவல் அறிந்து பெரியப்பாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News