உள்ளூர் செய்திகள்

வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள வாக்குவாதம் செய்த காட்சி. 

கடலூர் குப்பன்குளத்தில் வீடுகளை இடிக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Published On 2022-12-28 08:58 GMT   |   Update On 2022-12-28 08:58 GMT
  • அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
  • மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர்.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்‌. இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்க சென்ற போது துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவகாசம் வழங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த அதிமுக கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அப்போது பொதுமக்களிடம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். ஆனால் கடந்த முறை நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என தெரிவித்து கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து நாங்கள் வீடுகளை இடிக்காமல் சென்றோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி வருகிற 6-ம் தேதிக்குள் கண்டிப்பாக வீடுகளை இடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். ஆகையால் வருகிற 4-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அல்லது வீடுகளை காலி செய்யுங்கள் இதனை மீறினால் பாரபட்சம் இன்றி கண்டிப்பாக வீடுகள் இடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News