கார் மீது தனியார் கல்லூரி பஸ் மோதல்
- ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் சென்னை என்ஜினீயர் பலி- மனைவி படுகாயம்.
வாழப்பாடி:
சென்னை தியாகராயர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 50). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவி சுபஸ்ரீயும் கோயம்புத்தூருக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை சென்னை நோக்கி சேலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி புறவழிச்சாலையில் உள்ள புதுப்பாளையம் ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்றபோது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ்குமார் படுகாயம் அடைந்து காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி சுபஸ்ரீ பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி க்கொண்டிருந்தார்.
உடல் மீட்பு
விபத்து காலையில் நடந்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூடினர். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து படுகாயம் அடைந்த சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார், காரில் உள்ள இடிபாடுகளை அகற்றி ராஜேஷ்குமார் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சேலம்- சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
விபத்துக்குள்ளான பஸ் சேலம் அம்மாப்பேட்டையில் செயல்படும் ஒரு தனியார் மகளிர் கல்லூரிக்கு சொந்தமானதாகும். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.