உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் கைதி செல்போனில் பேசிய விவகாரம்: 2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்டு

Published On 2023-04-02 14:50 IST   |   Update On 2023-04-02 14:50:00 IST
  • நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
  • போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது.

மதுரை:

மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் 'வீடு ஒத்திக்கு விடப்படும்' என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா குத்தகை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News