கர்ப்பிணியான சிறுமி சாவு: குழந்தை திருமணம் செய்த வாலிபர், தந்தை மீது வழக்கு
- வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியும் காதலித்து வந்தனர்.
- தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே கண்டகபைல் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது22) என்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியும் காதலித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி கண்டகபைல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டு தனியாக அவர்கள் வசித்து வந்தனர். சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்த போது திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தை திருமணம் செய்ததை கண்டறிந்த மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் ஊர் நல அலுவலர் சாந்தி மகேந்திரமங்கலம் போலீசில் குழந்தை திருமண தடுப்பு சட்டப்படி முத்து மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி உயிரிழந்ததால் கணவர் முத்து, மற்றும் முத்துவின் தந்தை சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.