சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியை கீழே தள்ளி செயின் பறிப்பு- கணவனுடன் சென்றபோது நடந்த துணிகரம்
- செயின் பறித்த மர்ம நபர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- பைக்கில் இருந்து தவறி விழுந்த அமுதா அவரது மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை சேர்ந்தவர் தட்சுணாமூர்த்தி. உளவு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 43), மகள் சந்தியா (18) நேற்று இரவு தட்சிணாமூர்த்தி மனைவி மகளுடன் பைக்கில் வேலூர் வந்தார். இரவு பைக்கில் 3 பேரும் அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொய்கை அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தனர்.
இதில் நிலைதடுமாறி அவர்கள் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். செயின் பறித்த மர்ம நபர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பைக்கில் இருந்து தவறி விழுந்த அமுதா அவரது மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அமுதாவிற்கு காலில் எலும்பு முறிவும், சந்தியாவிற்கு முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.