உள்ளூர் செய்திகள்

யூனியன் சேர்மன் செல்வி வடமலைப்பாண்டியன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தபோது எடுத்த படம். 

திருச்செந்தூர் யூனியனில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-09-02 07:05 GMT   |   Update On 2023-09-02 07:05 GMT
  • திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
  • விழாவில் திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், காலநிலை மாற்றத்தை வலியுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன், யூனியன் துணைத்தலைவர் ரெஜிபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள் வாசுகி, ராமலட்சுமி, செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதா, பழநி கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் பிரேம் சந்தர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) வாவாஜி மற்றும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, சங்கீதா, மதுரிதா சந்திரசேகரன், சிகரம் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News