உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் படுகாயம்

Published On 2023-08-04 14:54 IST   |   Update On 2023-08-04 14:54:00 IST
  • தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்
  • மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் மதுபாலன் (வயது 18). இவரும் அதே பகுதியை சோ்ந்த நண்பரான காமராஜின் மகன் சுவராஜூம் (19) திருச்சி மாவட்டம், கொணலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று காலை மதுபாலனும், சுவராஜூம் கல்லூரிக்கு செல்வதற்காக இரூர் பஸ் நிறுத்தத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரூர் பஸ் நிறுத்தத்தில் சுவராஜ் மொபட்டில் இருந்து இறங்கி விட்டார். பின்னர் மதுபாலன் மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, எஸ்.புதுப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் மதுபாலன் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் ரமேசும், அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த சேதுவும் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுபாலன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News