வேப்பந்தட்டை பாலையூரில் வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
- திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஸ்ரீ வேத நாராயண பெருமாள் சுவாமி கோவில், ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், ஆஞ்சநேயர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் யாகசாலை பூஜை மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.
நேற்று காலை நாடி சந்தனம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர், வேத நாராயண பெருமாள் உள்பட 11 விமானங்களுக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேக புனித நீர் ஊற்றும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவன நடைபெற்றது. விழாவில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாக் குழுவினர்கள் சார்பில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.