உள்ளூர் செய்திகள்

சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளை

Published On 2022-09-13 13:43 IST   |   Update On 2022-09-13 13:43:00 IST
  • சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளை போனது
  • பூட்டிய வீட்டை நோட்ட மிட்டு கைவரிசை

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருபவர் திருத்தணிகைநாதன் (வயது 52). இவரது மனைவி மாரியம்மாள் (48). மகன் தில்லைபார்வதி (20). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினியரிங் படித்து வருகிறார்.

திருத்தணிகைநாதன் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சொந்தமான குடியிருப்பு வாளாகத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். மகன் மதுரையில் படித்துவருவதால்,திருத்தணிகைநாதன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இவர் வழக்கம் போல் நேற்று பணிக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளது. ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து திருத்தணிகைநாதன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளையும் பார்வையிட்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Tags:    

Similar News