உள்ளூர் செய்திகள்

திருவாளந்துறை-திருக்கல்பூண்டி உயர்மட்ட பாலம் பணிகளை உடனே தொடங்க வேண்டும்-2 மாவட்ட மக்கள் கோரிக்கை

Published On 2022-06-29 09:51 GMT   |   Update On 2022-06-29 09:51 GMT
  • பெரம்பலூர், கடலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருவாளந்துறை- திருக்கல்பூண்டி உயர்மட்ட பாலம் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • இந்த மேம்பாலம் அமைவதன் மூலம் பெரம்பலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களையும் சேர்ந்த 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கும் பயண தொலைவு, நேரம், அலைச்சல், எரிபொருள், செலவினம் ஆகியன மிச்சமாகும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை மற்றும் கடலூர் மாவட்டம் திருக்கல்பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலின்போதும் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மறக்காமல் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருவதும் காலம் காலமாய் இருக்கிறது.

அரசியல கட்சிகள் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையிலும் திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெறாமல் இருந்ததில்லை. ஆனாலம் தற்போது வரை அந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது.

பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த உயர்மட்ட பாலம் திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரம்பலூர்-கடலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருவாளந்துறை-திருக்கல் பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் அந்த திட்டம் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. மாணவர் மன்ற மாநில துணை அமைப்பாளர் தமிழருண் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள திருவாளந்துறை, இனாம், அகரம், வி.களத்தூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வேலைகள் நிமித்தமாக வெள்ளாற்றின் மறுகரையில் உள்ள கடலூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

அதே போல கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருவாளந்துறை கிராமத்தில் வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற தோலீஸ்வரர் கோவிலில் வழிபடவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மற்றும் பல்வேறு ேதவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.

வெள்ளாற்றில் தண்ணீர் இல்லாத போது இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆற்றில் இறங்கி நடந்தும் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து லெ்கின்றனர்.

ஆனால் ஆற்றில் தண்ணீர் இருந்தால் 18 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதனிடையே 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டம் இன்றளவும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது.

இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மேம்பாலம் கட்டும் பணியின் நிலை குறித்து பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் கேட்டதற்கு கடந்த 2021 ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி பதில் வரப்பெற்றது. அதில் ரூ.10.34 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் திட்ட அறிக்கைத் தயாரித்து அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு பணிகள் ெதாடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் அமைவதன் மூலம் பெரம்பலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களையும் சேர்ந்த 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கும் பயண தொலைவு, நேரம், அலைச்சல், எரிபொருள், செலவினம் ஆகியன மிச்சமாகும்.

எனவே 2 மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியை அரசு உடனே தொடங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News