ரூ.15 லட்சத்தில் சின்னாறு ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி
- ரூ.15 லட்சத்தில் சின்னாறு ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
- பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் தொடங்கி வைத்தார்
அகரம்சீகூர்:
பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சின்னாறு ஏரி. இந்த ஏரிக்கு கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக்கட்டு மூலம் தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரியின் வரத்து வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், முட்புதர்கள் மற்றும் மண் மேடு ஏற்பட்டு தண்ணீர் வரத்து நின்றது. இதனால் பாசன வசதி பெற்ற நிலங்களை கொண்ட விவசாயிகள் அவதிப்பட்டனர்.
சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கி.மீ தொலைவிற்கு வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வார மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியை இன்று கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ. பிரபாரகன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இந்த பணி வரும் ஜூன் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படடுகிறது. இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், மருதையாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.