உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த கிராம மக்கள்.

நத்தம் இரட்டை கொலை மாவட்ட எஸ்.பி.யிடம் உறவினர்கள் பரபரப்பு புகார்

Published On 2022-08-16 07:34 GMT   |   Update On 2022-08-16 07:34 GMT
  • 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர்.
  • நத்தம் இரட்டை கொலை சம்பவத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் தங்கராஜா (வயது 41). டி.வி. மெக்கானிக். இவர் கடந்த 6-ந் தேதி தனது கடை முன்பு நின்று பேசிக் கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரிவாளால் வெட்டியதில் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஒன்று கூடி உதயகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த உதயகுமாரும் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் லிங்கவாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து உதயகுமாரை அடித்துக் கொன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தங்கராஜாவின் தந்தை தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர். அதில் இரட்டை கொலை சம்பவத்தில் நத்தம் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். குறிப்பாக ஜாதிய ரீதியில் குற்றவாளிகளை அடையாளப் படுத்துகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இரவு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே போலீசார் மீது அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இல்லையெனில் லிங்கவாடி கிராம மக்கள் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றனர்.

Tags:    

Similar News