உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் மகளிர் இலவச பஸ் குறைக்கப்பட்டதால் பயணிகள் நெருக்கடி

Published On 2022-06-17 13:15 IST   |   Update On 2022-06-17 13:15:00 IST
  • திண்டுக்கல்லில் அரசு சார்பில் இயக்கப்பட்ட மகளிர் இலவச பஸ் குறைப்பால் பயணிகள் நெருக்கடியில் தவித்து வருகின்றனர்
  • இலவச மகளிர் பஸ்சில் நெருக்கடி

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவி ஏற்றதும் பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் மகளிர், கூலித்தொழிலாளர்கள், ஏழை,எளிய மக்கள் என பல்வேறு தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றனர்.

இருந்தபோதும் சில பெண்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதால் பஸ்சில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து வி.எஸ்.கோட்டை, நிலக்கோட்டை, மல்லையாபுரம், சாணா–ர்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பஸ்களின் சேவை குறைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து வி.எஸ்.கோட்டையை சேர்ந்த ராமநாதன் என்பவர் கூறுகையில், கிராமங்களில் இருந்து வேலை நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். டவுன் பஸ்களில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் பணத்தை சிக்கனப்படுத்தினர்.

இருந்தபோதும் ஒரே நேரத்தில் அதிக அளவு மகளிர் வருவதால் கண்டக்டர் மற்றும் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. கடந்த மாதம் ஏராளமான போக்கு வரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். புதிதாக பணி நியமனம் செய்யப்படாததால் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும்பாலான டவுன் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

5 முறை இயக்கப்படும் டவுன் பஸ்கள் 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இது டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

மேலும் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் பஸ் புறப்படாததால் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்றார்.

Tags:    

Similar News