உள்ளூர் செய்திகள்

செம்பனார்கோயில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம்

Published On 2022-06-28 09:40 GMT   |   Update On 2022-06-28 09:40 GMT
  • கட்டிடங்கள், வீடு உள்ளிட்டவைகள் கையகப்படுத்தியதற்குரிய இழப்பீட்டுத் தொகை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை.
  • இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர்பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பின ர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

அதன் விவரம் வருமாறு:-

தேவிகா: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளதால் கழிவறையை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும் அப்பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும்.

சாந்தி: ஆக்கூர் முக்கூட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து அன்னப்பன்பேட்டை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்குரிய நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. அடிமனை தருமபுர ஆதீனம் திருக்கடையூர் கோயிலுக்கு சொந்தமானதாகும். அதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டிடங்கள், வீடு உள்ளிட்டவைகள் கையகப்படுத்தியதற்குரிய இழப்பீட்டுத் தொகை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை. எனவே இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

ஜெயந்தி: தில்லையா டியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். ரஜினி: செம்பனார்கோயில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்தாஸ்: நாச்சிக்க ட்டளை- காந்திநகர் இடையே ராஜேந்திரன் வாய்க்காலில் பாலம் அமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழு தலைவர்: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பது மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் குறைபாடுகளை கண்டறிந்து உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

Tags:    

Similar News