வைத்தியநாத சுவாமி கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
- பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நா யகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.
நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சுவாமிகள் தனி தனி சன்னதில் அருள் பாலிக்கின்றனர்.
இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடை பெற்றது.
கார்த்திகை மண்டபத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாராதனை உடன் வீதியுலா துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக திரளான பக்தர்கள் கும்மியடித்து விழாவை கொண்டாடினர்.
வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள், பக்தர்கள், குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.