உதவி ஆணையர் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பிரச்சினை பழனி கோவில் உதவி ஆணையர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து வியாபாரிகள் பொருட்களை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதால் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
- கோவில் உதவிஆணையர் லட்சுமி இன்று அடிவாரம் பகுதியில் வாகனத்தில் வந்தபோது அப்போது வியாபாரிகள் ஒன்றுகூடி அவரது வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி ேகாவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து வியாபாரிகள் பொருட்களை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதால் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருசில சமயங்களில் வியாபாரிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. இதனையடுத்து கோவில் அடிவாரம் பகுதியில் தினசரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பழனிகோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் உதவிஆணையர் லட்சுமி இன்று அடிவாரம் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகள் ஒன்றுகூடி அவரது வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக கோவில் ஊழியர்கள் தங்கள் மீது அத்துமீறி நடந்து கொள்வதாகவும், பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயங்களில் மட்டுமே தங்கள் வியாபாரம் நடப்பதால் தங்களுக்கு தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.,
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உதவி ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து அவரது வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.