உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நினைவு பரிசு வழங்கினார்.

நமது நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது- கவர்னர் பேச்சு

Published On 2023-09-18 09:16 GMT   |   Update On 2023-09-18 09:16 GMT
  • இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
  • பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். முன்னதாக அவருக்கு அணைக்கரையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்பு அளித்தார்.

அப்போது கவர்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இன்னிசையுடன் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மனக்குன்னம் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் கவர்னர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சிதம்பரநாதபுரம் மாணிக்க நாச்சியார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது கிராமமக்கள் கவர்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து, ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்பட வில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.

தர்மத்தின் அடிப்படையில் கலாசாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும் வழி ஒன்று தான்.

கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை இந்த நாடு ஒன்றுபட்ட குடும்பமாக திகழ்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது.

வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள்.

இதனை பொறுத்தே இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம்.

ஆனால் தொடர்ந்து கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவில் மதத்தின் பெயரில் வேறுபாடு இல்லை. அனைவரும் சமம். எந்த ஒரு தீண்டாமையும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட முறையில் வளர்ந்து கொண்டி ருக்கும் நாட்டில் தீண்டாமை ஏற்புடைய தல்ல.

அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம்.

அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை சமமாக நடத்துவதோடு மரியாதை கொடுப்பது கடமையாகும்.

அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கவர்னர் ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது சிவராமபுரம் வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்தார்.

விழா அரங்கில் கவர்னர் முன்னிலையில் பரதநாட்டியம், சிவ குலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், பறையாட்டம், நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான சரவணவேல், ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக தமிழ்நாடு பறையர் பேரியக்கத்தை சேர்ந்த சிவகுரு அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியை தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன் தொகுத்து வழங்கினார்.

முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News