உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நாளை, அக்னி வீரர்கள் தேர்வுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Published On 2023-03-27 09:42 GMT   |   Update On 2023-03-27 09:42 GMT
  • இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
  • தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற 31-ந் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழித் தேர்வு மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என 3 முறைகளை கொண்டது.

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தேர்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிஅளவில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News